Followers

Sunday, December 29, 2019

வற்றாயிருப்பு

பருஉடலுக்கு உள்ளாக நுண் உடல் என்று சொல்லக்கூடிய சூக்கும உடல் ஓடிக் கொண்டும், சுழன்றுக் கொண்டும் இருக்கிறது. அந்த சுழற்சியினால் ஒவ்வொரு அணுவும் காந்த அலை வீசிக் கொண்டு இருக்கிறது. இந்த காந்த ஆற்றல் உடல் முழுவதுமாக பரவுகிறது. இவ்வாற்றல் தான் புலன் இயக்கமாகவும், மன இயக்கமாகவும் இயங்கி வருகின்றன. மனம் ஜீவகாந்த அலையாக இயங்குவதால், இந்தச் சக்தியை நம் உடலில் குறைபாடுள்ள இடத்தில செலுத்தினால் அங்குள்ள குறைபாடு நீங்கி விடும். காந்த ஆற்றல் ஒவ்வொரு அணுவையும் நலமாக வைத்துக் கொள்ளும். மனதின் சக்தியை நாம் உணர வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான் நம் அறிவின் பயணத்தில் தடை ஏற்படாமல் இருக்கும். இரத்த ஓட்டம் உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் சீராக பரவ வேண்டும். நரம்புகள் மூலம் உயிர்ச்சக்தி வெப்பமாகி உடலில் மின்சாரமாகப் பரவுகிறது. பிராண வாயு உடலில் சீராக இருக்க வேண்டும். நம் உடலில் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி  மிக மிக அவசியம். குரு வேதாத்திரி மகரிஷி அருளிய எளிய முறை உடற்பயிற்சி வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாள் தவறாமல் இப்பயிற்சியை செய்யும் போது உடலும் மனமும் புத்துணர்வாக இருக்கிறது. உயிரை பரத்துக்கு கொண்டு வந்து எந்த நிலையிலேயும் நிலைத்து நிற்க பழக வேண்டும். அது தான் தவம். ஆணவம், கன்மம், மாயை என்ற களங்கம் நீங்கிய ஜீவனுக்கு ப்ரம்மம் என்று பெயர். களங்கம் நீங்கிய ஜீவன் மெய் பொருளாகவே மாறும். உண்மை நிலை அறிவதற்காகவே மனித உடலுக்கு ஆறாவது  அறிவு வந்த போதிலும் பழக்க வழக்கம் காரணமாக வந்த இலட்சியத்தை மறந்து விட்டோம். பொருள் மற்றும் புலனுணர்ச்சி மீது பற்றுக் கொண்டு பலவாறான செயல்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். இதனால் பல தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் உள்ளாகிறோம். மனித சமுதாயம் இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதற்கு எல்லோரும்  தமக்குத் தாமே அவர்கள் மனதை சோதித்துக் கொள்ள வேண்டும். சிறிதும் தாமதமில்லாமல் உடனே தற்சோதனைக்கு நம்மை நாமே உட்படுத்திக் கொள்ள வேண்டும். என்றாவது ஒருநாள் நம் அறிவுக்குள்ளாக புதைந்துக் கிடக்கும் இயற்கை ரகசியங்கள் தெரிந்து விடும். பழக்கத்தினால் சிக்கிய நம் வாழ்க்கையை, விளக்கத்தின் வழியே மாற்றி உயர்வு அடைய வேண்டும். விளக்கத்தின் வழியே சென்றால் நாம் அடைய வேண்டிய இடமான எல்லையில்லா இருப்பு மண்டலத்தோடு இணைவது ஞான மார்க்கமாகும். அந்த ஞான மார்க்கத்தை அடைவதற்கு வழியில் ஏற்படும் தடைகளை கண்டு பிடித்து அவற்றை திருத்தி, உணர்ந்து உயர்ந்து அதுவாகவே மாறுவது தான் ஆன்மிகம். நம் உடலுக்குள் உயிர் ஆன்மாவாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அதே உயிர் உடலுக்கு வெளியே மகாகாசமாக பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கக்கூடிய மகாகாசத்தை நாம் உயிர் என்ற பெயரில் உடலளவில் எல்லைக் கட்டிவிட்டோம். நாம் மனதால் எல்லையில்லாமல் விரிய வேண்டும். ஆன்மாவின் செயலும், அனுபவமும் தான் மனம். பல கோடான கோடி நுண்துகள்களின் தொடரியக்கம் தான் ஆன்மா. 

வாழ்க  வையகம்
வாழ்க  வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று இன்புற்று வாழ்க 

No comments:

Post a Comment